எடப்பாடிக்குதான் முதல்வர் பதில் சொன்னார்.. வழக்கு தொடர்ந்தால் சந்திக்க ரெடி.. அமைச்சர் விளக்கம்!
முதலமைச்சர் நேற்று பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் என அதிமுக புகார் அளித்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உததவித்தொகை குறித்து ஈபிஎஸ் பேசியதற்காக முதல்வர் பதில் அளித்துள்ளார் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதி கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தது.
இந்நிலையில், அதிமுக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என திமுக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

கடைசி நாள் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், சில பகுதிகளில் வீதிகளில் நடந்து சென்றும் ஆதரவு திரட்டினார். நேற்று எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ரூ.1000 உதவித்தொகை
நேற்றைய பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சித் தலைவரோ, மக்களோ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். நிதி நிலைமையை முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம். ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதிமுக புகார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியது, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று கூறி, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய முதலமைச்சரே இதுபோன்று செயல்படுவது தவறானது என்றும் இன்பதுரை தெரிவித்தார்.

முதல்வர் விளக்கம்
இதற்கு தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை எனத் தெரிவித்தார். ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சந்திக்க ரெடி
இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து அதிமுக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "பெண்களுக்கான உதவித்தொகை குறித்து எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்குதான் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதியை பரப்புரையில் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. இதற்காக அதிமுக வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications