Tamilnadu Lockdown: மேலும் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு? ஆலோசனை தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாசிட்டிவிட்டி ரேட்டானது 16 முதல் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 25,978 ஆக உள்ளது.

முதல்வர் தலைமையில் ஆலோசனை
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி தமிழகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, தியேட்டர்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இவை கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்குடன் இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லை கட்டுப்பாடுகளை மேலும் கொண்டு வருவதா என்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

முடிவுகள் என்ன?
இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால் அதுகுறித்த கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

என்ன மாதிரியான கட்டுப்பாடுகள்
அத்துடன் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்கிறதோ அந்த மாவட்டத்திற்கு மட்டும் லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பதிவாகும் கொரோனா ஒரு நாள் கேஸ்களில் 50 சதவீதம் கேஸ்கள் சென்னையை சேர்ந்தவையாக இருக்கின்றன. எனவே தலைநகர் சென்னைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கடைகளின் நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications