செஸ் தொடரில் புதிய சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் குகேஷ்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று சாம்பியன் ஆன தமிழ்நாட்டு இளம் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனடாவில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியாவின் 17 வயதான குகேஷ் முதலிடம் பிடித்து, 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனை படைத்துள்ளார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் குகேஷ்.

இந்தப் போட்டியின் 14ஆவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில், இருவரும் டிரா செய்து தலா அரை புள்ளிகள் பெற்றனர். இந்த சுற்றின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகள் பெற, நகமுரா 8.5 புள்ளிகள் வென்றார். இதன் மூலமாக முதல் முறையாக கேஷ் கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாடுவதற்கு தகுதியும் பெற்றுள்ளார் குகேஷ். உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்ள இருக்கிறார் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குகேஷை வாழ்த்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications