எவரெஸ்ட்டை எட்டிய சாதனை தமிழர் ராஜசேகருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! இளைஞர்கள் குறித்து பெருமிதம்
சென்னை : எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள் என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள கோவளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ராஜசேகர் பச்சை உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்., அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் ராஜசேகர். பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரென மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சிகள் எடுத்து, 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி குளிரைத் தாங்க மணாலி, சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்ட குட்டி, ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

8850 மீட்டர் உயரத்தை மே 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கினார் ராஜசேகர். எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதித்துள்ள ராஜசேகர், உலக அரங்கிலும் தமிழ்நாட்டின் பெருமையை நிலைபெறச் செய்துள்ளார். இந்நிலையில், சாதனைத் தமிழர் ராஜசேகருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications