எடப்பாடி பழனிசாமி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. ஸ்டாலின் சரமாரி தாக்கு!
சென்னை: திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை. திமுக கூட்டணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஜோசியம் கூறுகிறார். செல்லாக்காசாக உள்ள எடப்பாடி பொறாமையில் பேசுகிறார் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணு இல்லத் திருமணத்தை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

இந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள திமுக, ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க என்றும் மக்கள் பணியில் இருக்கும்.
திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஆனால் விரிசல் ஏற்படாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர், அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தனது கட்சியில் உள்ள குழப்பங்களைச் சரிசெய்ய முடியாமல் திமுக கூட்டணி உடையப்போகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர். எனவே கனவு காண வேண்டாம்.
சென்னையில் மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வர மாட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக கூட்டணி தான் வெல்லும்" எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications