நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.. ஸ்டாலின் பேச்சு!
கிருஷ்ணகிரி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். "திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 404 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூர் சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்தும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கோடியே 5 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் இணைப்பு சக்கர வாகனத்தை சுமார் 290 மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும், 562 கோடியே 14 லட்சத்து 3000 ரூபாய் மதிப்பிலான 1114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 270 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 193 முடிவுற்ற திட்டப் பணிகள், அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 2,23,013 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 52 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "வரலாற்று பெருமையை கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்டது. திராவிட மாடல் ஆட்சிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம். ஊரக பகுதிகள் போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது திமுக ஆட்சியில் தான். " என்றார்.
கிருஷ்ணகிரிக்கு புதிய அறிவிப்புகள்
மேலும், ஒசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும். கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும். ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஓரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் ஆகிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றன
"திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 404 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர். மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மக்கள் பயன்பெறும் பல நலத்திட்டங்கள் நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவைதான். காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் பல நலத் திட்டங்கள் நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவைதான்.
நீட் விவகாரத்தில் அதிமுக நாடகம்
நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறுக்கவில்லையே. இருப்பினும், அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்காமல் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு சட்டம் இயற்றி அனுப்பினோம். அதை ஆளுநர் மூலம் என்னென்ன சூழ்ச்சிகள் செய்து மத்திய அரசு தடுத்தது என மக்களுக்குத் நன்றாகத் தெரியும்.
அப்போதும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். அதிமுகவைப் போல மறைத்து வைத்து நாடகம் ஆடவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயம் ஒருநாள் நம் மாநில உரிமைகளை காக்கும் அரசு மத்தியில் அமையும்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications