எக்ஸ்போ முடியும் போது நான் ஏன் துபாய் போனேன் தெரியுமா? சட்டசபையில் ஸ்டாலின் தந்த விளக்கம்
சென்னை: துபாயில் தொழில் துறை சார்பில் நடத்தப்பட்ட உலக கண்காட்சி முடியும் தருவாயில் நான் சென்றது ஏன் என்பது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலானது. அதையடுத்து 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கலானது. இரு பட்ஜெட்டுகள் மீதும் 24 ஆம் தேதிவரை விவாதம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. இது மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

21 நாட்கள்
21 நாட்கள் இந்த சட்டசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய முதல் நாள் நீர் வளத் துறை மீதான மானிய கோரிக்கைகள் குறிதது விவாதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110 இன் கீழ் உரையாற்றினார். அப்போது தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.

திமுக ஆட்சி
அவர் கூறுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.68,375 கோடி முதலீட்டையும் 2 லட்சத்து 5,802 பேருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

25 மாவட்டங்கள்
25 மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் தொழில் துறை கண்காட்சி முடியும் தருவாயில் நான் சென்றதற்கு காரணம் அப்போதுதான் அங்கு பெரிய பெரிய முதலீட்டாளர்கள் வந்திருந்தார்கள். நமது தமிழ் சொந்தங்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டிருந்தேன்.

துபாய் பயணம்
துபாய் பயணத்தின் போது 6100 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு பெற்றேன். சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில் முறை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லூலூ பன்னாட்டு நிறுவனம் தமிழகத்தில் 3500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

தொழில் துறை
தமிழகத்தில் தொழிற்துறையில் வளர்ச்சியை அதிகரிக்கவும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திண்டிவனம், வாலாஜாபாத்தில் ரூ 500 கோடியில் ஆடை, தையல் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. 24 துறைகளில் 100 சேவைகள் ஒற்றை சாளர இணையதளம் 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எந்த நாடுகள்
அது போல் ஒற்றை சாளர கைப்பேசி செயலியையும் தொடங்கி வைத்துள்ளேன். மே மாதம் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஜூன் மாதம் இங்கிலாந்து, ஜூலை மாதம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள், இனி போடவிருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும். தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தொழில் துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல கட்சி வித்தியாசம் பாராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எனது பயணத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

துபாய் பயணம் குறித்து ஈபிஎஸ்
முதல்வரின் துபாய் பயணம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க சென்றதாக கூறுகிறார். ஆனால் அவருடன் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் சென்றதாக தெரியவில்லை. குடும்பத்தினரைத்தான் அழைத்து சென்றுள்ளார். அதிலும் துபாய் உலக கண்காட்சி முடியும் தருவாயில் சென்றால் முதலீடுகளை எப்படி ஈர்க்க முடியும் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications