மாணவர்களுக்கு ரூ.1000.. தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆக. 9ல் தொடக்கம்.. ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

ஸ்டாலின் பேச்சு: மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது என்னையே அறியாமல் புதிய உற்சாகம் பிறக்கிறது. முடிந்த அளவுக்கு 10 நாளுக்கு ஒருமுறையோ வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வருகிறேன். நமது பணிகளால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு 10 சிறந்த திட்டங்களை கொண்டு வாருங்கள். ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர வேண்டும்." எனத் தெரிவித்தார்.
தமிழ்ப்புதல்வன் திட்டம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால், "புதுமைப்பெண்' என்ற திட்டம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்காக தொடங்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1000 வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து, "தமிழ்ப்புதல்வன்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, உயர்கல்வி படிக்கும் மாணவர்களும் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 1000: தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி படித்த மாணவர்கள், தங்கள் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி பட்டயப்படிப்பு பெறும் காலம் வரை இந்த உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
முன்னதாக, அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 நிதியுதவி வழங்கிடும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.












Click it and Unblock the Notifications