முதல்வர் நெகிழவைத்த வைத்த மூவர்!- யார் இவர்கள்? ஏன்?
சென்னை: இந்த மூன்று நாள்களில் 3 பேர் வாழ்க்கையில் 3 சிறப்பான சம்பவங்களைச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்படி என்ன சம்பவங்கள் என்கிறீர்களா? : முதல் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. தென்மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின், 86 வயது பெரியவர் ஒருவரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யார் அந்தப் பெரியவர் என்கிறீர்களா?
அரசுப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காகக் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வத்தல் வியாபாரி இராஜேந்திரன். இவரைத்தான் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறையினர் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி.
அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா!" என்று கூறியுள்ளார்.

மதுரை தத்தநேரி பகுதியில் வசித்து வரும் இராஜேந்திரன், கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி திருவிக பள்ளியில் மேம்பாட்டுக்காக 10 புதிய வகுப்பறைகள் மற்றும் இறைவணக்கக் கூடம் ஆகியவற்றைத் தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்தார். இதற்காகத் தனது சொந்த பணத்திலிருந்து ரூ 1 கோடி ரூபாய் செலவு செய்திருந்தார்.
இந்நிலையில் இப்போது கைலாசபுரம் மாநகராட்சிப் பள்ளிக்காக 71 லட்சம் ரூபாய் செலவு செய்து நான்கு புதிய வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் உணவுக் கூடத்தினைக் கட்டித்தந்துள்ளார்.
இதுகுறித்து பெரியவர் இராஜேந்திரன், "நான் வாழ்ந்து அனுபவித்துச் சம்பாதித்த இடங்கள்தான் செல்லூர், தத்தநேரி, மதுரை. நான் சம்பாதித்த பணத்தின் பலன் இந்தப் பகுதி மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.
இவர்கள்தான் என் தொழிற்சாலையில் உழைத்தவர்கள். அவர்களால்தான் நான் இந்தளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆகவே அவர்களுக்கு என் பணம் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவிகளைச் செய்தேன்.
நான் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. ஆனால், அந்தச் செய்தியை அறிந்து முதல்வர் ஸ்டாலின் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார். சால்வை அணிவித்துக் கௌரவித்தார். கலைஞரின் சிலையை அவரது கையால் பரிசாகத் தந்தார். நான் இதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என் வாழ்வில் இது சந்தோஷமான தருணம்" என்கிறார். .

இதைப் போலவே இன்னொரு நிகழ்வு. பள்ளிச்சிறுவன் விதர்சனுக்கு முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதை நேரில் கண்டு ரசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான். அந்த விருப்பத்தை நிறைவேற்றும்படி ஸ்டாலினுக்கு அவன் கடிதமும் எழுதி உள்ளான்.
இந்தச் சிறுவன் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகிலிருந்து பார்க்க வேண்டும் எனக் கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை முதலமைச்சர் நிறைவேற்றி வைத்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு பற்றி சிறுவன் விதர்சன், "எங்கள் ஸ்கூல்ல உள்ள பல பேர் கடிதம் எழுதினார்கள். நானும் எழுதினேன். என்னைக் கூப்பிட்டு விழாவில் கொடி எற்றுவதைப் பார்க்கவைத்தார் முதலமைச்சர். எனக்கு ரொம்ப ஹேப்பியாக இருக்கிறது" என்கிறான்.

அவரது தாய் அமுதவல்லி, "எங்களை வரவழைத்து, தங்க வைத்து மரியாதையாகக் கவனித்துக்கொண்டார்கள். கொடி ஏற்றுவதையும் பார்க்கவைத்தார்கள். ரொம்ப பெருமையாக இருக்கிறது" என்கிறார்.
இதைப்போல் ஆசிரியர் சண்முகம், "எங்கோ கடைக்கோடியில் எங்கள் மாணவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காகச் சிரத்தை எடுத்து எங்களை எல்லாம் வரவைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். சிறந்த உணவு, சிறப்பான தங்கும் இடம், பயணத்தினை அவர்களே ஏற்பாடும் செய்து தந்துள்ளார்" என்கிறார் கம்பீரமான குரலில்.
அடுத்த ஒரு சிறப்பான சம்பவம். ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் செளபாக்யா தம்பதியினரின் மகள் சிறுமி டான்யா. இவர் அரிதான முக சிதைவு நோய் தாக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டுவந்தார். அதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் அரசு செலவு சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
அதனையொட்டி அவருக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. சிகிச்சை நடைபெற்ற பிறகு நேரடியாகச் சென்று சிறுமி டான்யாவை ஸ்டாலின் உடல்நலம் குறித்துக் கேட்டு அறிந்தார். சிறுமியின் பெற்றோர் அப்போது வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக முறையிட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் அவர்களுக்கு 3 செண்ட் அரசு சார்பில் நிலம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சிறுமி டான்யாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் 3 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கானப் பணிகள் தொடங்கி உள்ளன.
வீடு கட்டுவதற்கான தொடங்க விழாவில் அமைச்சர் காந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாசர், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்துள்ளனர்.
தங்களுக்கு வீடு கட்டித் தருவது குறித்து சிறுமி டான்யா, "இவ்வளவு நாள் நாங்கள் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டோம். இப்போது வீடு கட்டித்தருகிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இதைக் கட்டிக்கொடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிளுக்கு ரொம்ப நன்றி. ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள்" எனக் கொஞ்சம் மொழியில் நன்றி சொல்கிறார் இந்தச் சிறுமி.
தொடர்ந்து பேசிய அவரது தந்தை ஸ்டீபன், "பத்து லட்சம் ரூபாய் செலவில் முன்னாள் அமைச்சர் நாசர், அமைச்சர் காந்தி, மாதவரம் சுதர்சனம் எல்லாம் சேர்ந்து முன் பணம் போட்டு இந்த வீட்டை எனக்குக் கட்டித் தருகிறார்கள்.

இந்த ஆட்சியில் எனக்கும் என் குடும்பத்திற்கும் இவ்வளவு நன்மைகள் நடந்திருக்கிறது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாதான் காரணம். அவர் டான்யாவை அவரது மகளைப் போலக் கவனித்துக் கொண்டார்.
இன்றைக்கு என் கஷ்டங்கள் எல்லாம் பனிபோல் விலகி என் குடும்பமே சந்தோஷமாக இருக்கிறது. ஆகவே முதல்வர் ஸ்டாலின் அய்யாவை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்கமாட்டோம்.
எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின்தான் குலதெய்வம். ஏதோ வீடு கிடைத்ததால் சொல்கிறேன் என நினைக்கவேண்டாம். என் மகளை நீங்கள்தான் முழுதாக மீட்டுக் கொடுத்தீர்கள். அந்த நன்றி சொல்கிறேன். நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்கிறார்
இதைத்தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று அன்றே அண்ணா சொன்னார்.












Click it and Unblock the Notifications