எதிர்க்கட்சி யார் என்பதில் தான் போட்டியே.. விஜய் - எடப்பாடி பழனிசாமியை ஒருசேர கிண்டல் செய்த ஸ்டாலின்
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி கூறிய விஷயத்தைக் குறிப்பிட்டு அவரை கிண்டல் செய்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அடுத்தது நாங்கள் தான் ஆளுங்கட்சி எனக் கூறிக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக "நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி" எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆளுங்கட்சி எனக் கூறிக் கொண்டிருந்தவர் எதிர்க்கட்சி எனச் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஸ்டாலின் பேச்சு
சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் இன்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நோன்பு திறந்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "நல்லிணக்கத்தை விரும்புகிற இஸ்லாமிய சகோதரர்களையும் திமுகவையும் பிரிக்க முடியாது. அதனால்தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது போன்ற விழாக்களை பலரும் நடத்துவார்கள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு தீங்கு நடக்கும்போது வாய் திறக்க மாட்டார்கள்.
சிறுபான்மை மக்களுக்காக
குடியுரிமை திருத்தச் சட்டமாக இருந்தாலும் சரி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தாக இருந்தாரும் சரி, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் முதல் எதிர்ப்பு குரல் கொடுப்பது திமுக தான். வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும் , நாடாளுமன்ற கூட்டக்குழுவிலும், திமுக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றி, நம் அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய மற்றும் உலக அளவில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அமைப்புகள் அதை பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
எடப்பாடி மீது ஸ்டாலின் விமர்சனம்
ஆனால், இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை. ஏனென்று உங்களுக்கே தெரியும். இரவோடு இரவாக அவர் விமானத்தை பிடித்து டெல்லிக்கு போனார். அங்கு நான்கு காரில் மாறி மாறி போயிருக்கிறார். அப்படி சென்று இந்த சட்டத்தை கொண்டுவரப்போகிற அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று தெரிந்தும் அவர் வரவில்லை.
எதிர்க்கட்சி யார் என்பதில்தான் போட்டி
இன்றைக்கு பிரதான கட்சி திமுக தான். வேடிக்கை என்னவென்றால் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்து நாங்கள்தான் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்தார். இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக "நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி" எனக் கூறியுள்ளார். அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சி. இதில் 2வது இடத்திற்கு யார் வருவது என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நடந்து வருகிறது. நாம் எப்போதும் முதல் இடம் தான். இதை மமதையில் சொல்லவில்லை. மக்கள் நம்மை வரவேற்பதை வைத்துச் சொல்கிறேன். மக்களின் ஆதரவை வைத்துச் சொல்கிறேன்.
எடப்பாடிக்கு நன்றி
ஏற்கெனவே எதிர்க் கட்சியினரை சிறுபான்மையினர் முற்றிலும் புறக்கணித்து வந்தார்கள். இப்போது எதிர்க் கட்சியினர் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். சட்டமன்றத்தில் நான் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு போனதைப் பற்றி பேசினேன். கூட்டணி குறித்து அவர் பேசுவது அவர்கள் பிரச்சனை, ஆனால் இருமொழி கொள்கை குறித்து பேசிவிட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் அங்கு சந்தித்து பேசிவிட்டு, இருமொழி கொள்கை குறித்து அழுத்தமாக பேசியதாக சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.
அதே போல் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் அவர் பேச வேண்டும். அபோதும் கார் மாறி மாறி போய் பேசுங்கள் என்றேன். அதை அவை குறிப்பில் இருந்து அதிமுகவினர் நீக்கச் சொன்னார்கள். புண்படுத்தி இருந்தால் நீக்கிவிடுங்கள் என்று நானும் சொன்னேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இப்படி பயந்து அஞ்சி நடுங்கும் செயலைத்தான் எதிர்க் கட்சி இன்று செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதை திமுக எதிர்க்கும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது
முன்னதாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக - தவெக இடையேதான் போட்டி என்று விஜய் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். நாட்டில் எல்லாக் கட்சித் தலைவர்களும் அந்தக் கட்சி வளர்வதற்காகத் தொண்டனை உற்சாகப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வார்கள்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை மக்களே ஏற்றுக் கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். அவர் எங்களைச் சொல்லவில்லை என்றால் அவரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்" எனக் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications