ஆனந்தக் கண்ணீர் வடித்த பயனாளிகள்! 400 சதுர அடியில் மொத்தம் 2,707 வீடுகள்! திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஒவ்வ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரம் வருமாறு;

குடிசை மாற்று வாரியம்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்தார்.

அனைவருக்கும் வீடு
அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் ஒவ்வொரு குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இக்குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

நம் குடியிருப்பு
அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒதுக்கீடு ஆணை
இதனிடையே 4,880 பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 761 பகுதிகளில் வசிக்கும் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.












Click it and Unblock the Notifications