அனிதா தொடங்கி பலரின் உயிரை பலிகொண்ட பலி பீடம் நீட் - காணொலி பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அரியலூர் அனிதா தொடங்கி பலரின் உயிரை பலி கொண்ட பலி பீடம் தான் இந்த நீட் தேர்வு என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே கடலூர் மாவட்டத்தில் காணொலி வாயிலாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையிலிருந்தபடியே கடலூர் மாவட்டத்தில் காணொலி வாயிலாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் கூறுகையில், இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மட்டும் அல்ல, என்னுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாளாகும்.
இன்று காலையில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். அந்த மசோதாவை தமிழக ஆளுநருக்கு இன்று மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

மாணவ மாணவிகள்
அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவ, மாணவிகளின் உயிரை பறிக்க காரணமாக இருந்த பலி பீடம்தான் இந்த நீட். ஏழை எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பட்டியலின மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைவதற்கு தடை போடக் கூடிய தடுப்பணையாக இந்த நீட் இருக்கிறது.

நீட் பயிற்சி
லட்சக்கணக்காக செலவு செய்து பயிற்சி எடுக்க நீட் பயிற்சி மையங்களுக்கு வசதியாகத்தான் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இப்படி ஒரு தேர்வு தேவை என வழக்கு போட்டதே ஒரு தனியார் பயிற்சி நிறுவனம்தான். நீட் தேர்வை தலையாட்டி நாம் ஏற்றுக் கொண்டால், அடுத்தது பொறியியல் கல்லூரிகளுக்கும், கலைக் கல்லூரிகளுக்கும் இது போன்ற தேர்வை கொண்டு வந்துவிடுவார்கள்.

மாணவர்கள்
மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை என்பதே மாணவர்களை வடி கட்டுவதற்காக கொண்டு வரப்பட்டதுதான். ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த கல்வியை பறிக்கத்தான் இது போன்ற கொள்கைகளை கொண்டு வர துடிக்கிறார்கள். ஆயிரமாண்டு அடிமைத்தனத்திற்கு பின் போராடி பெற்ற சமூக நீதியை நாம் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என்பதற்கான அடையாளமாகத்தான் இன்றைய தினம் நீட் விலக்கு சட்ட முன் வடிவை நிறைவேற்றியிருக்கிறோம்.

கொரோனா கட்டுப்பாடுகள்
நீதி கட்சியின் முதல் முதலமைச்சரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பராயலுவின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் இந்த காணொலி கூட்டத்தின் வாயிலாக சமூகநீதியை எல்லாரும் காப்போம் என உறுதி எடுத்து எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். கடலூருக்கு நேரில் வந்து உங்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத அளவுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனால்தான் காணொலி வாயிலாக நடக்கிறது.

வெள்ளம்
கடலூர் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் கழக வேட்பாளர்களும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வெற்றி பெற்றதும் வெற்றி விழா பொதுக் கூட்டத்திற்கு நான் நிச்சயம் வருகிறேன். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலூரே வெள்ளத்தால் மிதந்தது. அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். கடலூர் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டேன்.

நவம்பர் மாதமும் வெள்ளம்
ஆட்சி மாறியதும் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்தது. அப்போதும் கடலூருக்கு வந்து மழை வெள்ள பாதிப்புகளை நான் பார்வையிட்டேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உங்களுக்கு ஒன்று என்றால் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
Recommended Video

உழைப்பதற்காக
உரிமையோடு கேட்கிறேன். உங்களுக்கு உழைப்பதற்காக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடலூர் மாவட்டமும் நாகை மாவட்டமும் இணையும் கொள்ளிடத்தில் ரூ 53 கோடி ரூபாயில் பாலம் கட்டிய அரசு திமுக. பண்ருட்டியில் அண்ணா பொறியியல் கல்லூரி, சோனங்குப்பம், சுத்திகுப்பம், ஆழங்குடா போன்ற பகுதிகளுக்கு ஆற்றின் மீது மேம்பாலங்கள். உறையூரில் துணைமின் நிலையம், நெல்லிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம், பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கடலூரில் மாவட்ட காவல் துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக கட்டடம், காட்டுமன்னார்குடியில் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிபாடியில் புதிய தாலுக்கா உருவாக்கம், புதிய மருத்துவமனை, திருப்பாதிரிபுலியூரில் சுரங்கபாதை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications