அம்மா.. நீங்கதான் திறக்கணும்.. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறப்பின்போது ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாக இருந்த நிலையில், தற்போது மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்துள்ளார் ஸ்டாலின்.
கடந்த 2021ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே தற்போது மருத்துமனை திறக்கப்பட்டுள்ளது.

'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை கடந்த ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணத்தால் மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வருகை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை எவ்வித தகவலும் தெரிவிக்காததால், இந்த மருத்துவமனையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ரிப்பன் வெட்டும்போது: மருத்துவமனையை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தபோது, ரிப்பன் வெட்டி திறக்க மருத்துவப் பணியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கத்தரிக்கோலை வழங்கினர். அதற்கு ஸ்டாலின், நீங்களே திறந்து வையுங்கள் எனக் கூறினார். மருத்துவப் பணியாளர்கள் கையிலேயே கத்தரிக்கோலை கொடுத்து, அவர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தனியாக ஓர் இயக்குநர், இரண்டு உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட உள்ளனர். இதைத் தவிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தை மேற்கொள்ள புதியதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications