கோவை கார் வெடிப்பு! பயங்கரவாதம் தலைதூக்கினாலே.. முதல்வர் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை- சேகர்பாபு
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுக்க கடந்த 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகக் கொண்டாட்டம் பெரியளவில் இல்லாமல் இருந்தது.
ஆனால், இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு விட்டதால், மக்கள் உற்சாகமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

தீபாவளி
காற்று மற்றும் ஒலி மாசு காரணமாக இந்தாண்டு பல மாநிலங்களில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லியில் ஒட்டுமொத்தமாகவே பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்கள்
பொதுமக்கள் தீபாவளியை கோகிலமாகக் கொண்டாடிய நிலையில், தலைநகர் சென்னையில் பல இடங்களில் பட்டாசு குப்பைகள் மலை போலத் திரண்டது. இதையடுத்து துளியும் தாமதமின்றி களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சில நாட்களிலேயே அனைத்து பட்டாசு குப்பைகளையும் முழுமையாக அகற்றினர். அவர்களைப் பாராட்டும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அமைச்சர் சேகர்பாபு
இதில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கினர். இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தூய்மை பணியாளர்கள் பாராட்டினார்.

சூரசம்ஹாரம்
தொடர்ந்து அவர் பேசுகையில், "சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காகத் திருச்செந்தூரில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் சதுரடிக்கு மேற்கூரை அமைத்துள்ளோம். ஃபேன், லைட், குடிநீர் மற்றும் மருத்துவ வசதி என அனைத்தும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு உள்ளது. எப்போதும் எதிர்மறை கருத்துகளைக் கூறும் பாஜக முக்கிய தலைவர்கள் கூட திருச்செந்தூரில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர்.

மிகப் பெரியது
தமிழகம் முழுக்க சுமார் 1200 கி.மீ. அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர், எந்தவொரு காலத்திலும் இவ்வளவு பெரிய மழைநீர் வடிகால் பணிகள் நடந்தது இல்லை. இது மிகப் பெரிய வேலை. இதை ஓராண்டில் முடித்து உள்ளோம். பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. சில இடங்களில் மட்டுமே நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

பருவமழை
பருவமழை காரணமாகச் சென்னையில் என்ன நடந்தாலும் அதைச் சமாளிக்கப் போர்க்கால அடிப்படையில் ராணுவத்திற்கு இணையாகத் தயார் நிலையில் இருக்கிறோம். பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எந்தவொரு அசௌகரியமும் ஏற்படக் கூடாது என்பதே முதல்வரின் உத்தரவு. பருவ மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

இரும்புக்கரம்
கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் உரியக் காலத்தில் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகச் சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் இந்த அரசு கவலைப்படாது. தமிழக மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். ஜாதி மத இன மோதல்கள் எதுவும் நடப்பதில்லை. பயங்கரவாதம் எங்குத் தலை தூக்கினாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க முதல்வர் தயாராக உள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications