கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. 1 கோடி இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000.. காஞ்சிபுரத்தில் தொடங்கிய முதல்வர்
சென்னை: 1 கோடிக்கும் மேலான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திமுக சார்பில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி நேற்றைய தினமே தொடங்கி உள்ளது. முன்னதாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் வகையில் சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றி நிலையில் அடுத்த கட்டமாக சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு இந்த பணி முழுமையாக நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 18ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பயனாளிகள் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விடும். இதற்காக பிரத்யேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட துவக்க விழா முறைப்படி இன்று தொடக்கி வைத்துள்ளார். இதற்காக பிரம்மாண்ட விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிருக்கு உரிமைத்தொகை திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்
இன்று காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் அங்குள்ள அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த விழாவிற்கு வந்துள்ள மகளிருக்கும் பொதுமக்களுக்கும் காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு விழாவிற்கு வரும் அனைத்து மகளிருக்கும் இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்பி சுதாகர் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications