வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவர்.. பெரியார் குறித்து அண்ணா கூறியதை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!
சென்னை: அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அண்ணா வழியில் அயராது உழைப்போம் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வம்பு இழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என தந்தை பெரியார் குறித்து அண்ணா கூறியதை நினைவு கூர்ந்து உள்ளார்.
திமுக நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை வாலாஜா சாலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே புறப்பட்ட இந்த பேரணி அண்ணா நினைவிடம் அருகே நிறைவடைந்தது.
இந்த பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மெரினாவில் அமைந்திருக்கும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி பெரியார் குறித்து அண்ணாவின் கருத்துக்களை நினைவுகூர்ந்து இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
இது தொடர்பாக தனது தளத்தில் பதிவிட்டுள்ள அவர்," அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: "எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்."

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications