மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் இல்ல.. வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் தமிழ்நாடு கண்டுள்ளது என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையையடுத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை என்ற போதும், GSDP வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை. மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை.. இருந்தும் GSDP வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.

கடந்த 3 ஆண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி! 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் - தமிழ்நாட்டுக்கே சொந்தம்! தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications