சபாநாயகரிடம் “ஃபைல்” கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்!
சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை இன்று சபாநாயகரிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். “நான் கூறியது தவறு என ஆதாரம் தந்தால் நீங்கள் கூறும் தண்டனையை ஏற்கிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சவால் விடுத்திருந்ததார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது அதிமுக எம்.எல்.ஏக்களை சாடிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போல எதிர்கட்சியினர் பேசி வருகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்து பாருங்கள்? தொடர்ச்சியாக பல பெண்களுக்கு இரண்டு வருடமாக நடந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிபிஐ விசாரணைக்கு பிறகே அந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளியாகின. அந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது. பாலியல் தொல்லை, ஆபாச வீடியோ தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதான் அன்றைய முதல்வர் சார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு லட்சணம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக பிரமுகர்கள் தான். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.
எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்பை மறந்து பேட்ச் அணிந்து வந்தார். பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுகவினர் சம்பந்தப்பட்டது. இப்படி பெண்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திய சாருங்க எல்லாம் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்து உட்காருகிறார்கள். இதுபோல அதிமுக ஆட்சியின் 100 சார் குறித்து நான் கேள்வி கேட்க முடியும்.” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை இன்று சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். “நான் கூறியது தவறு என ஆதாரம் தந்தால் நீங்கள் கூறும் தண்டனையை ஏற்கிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதனை மறுத்து பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் கூறியது தவறு என ஆதாரம் தந்தால் நீங்கள் கூறும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால் நான் கூறும் தண்டனையை ஏற்கிறீர்களா?” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் தான் இன்று சபாநாயகரிடம் ஆதாரத்தை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications