முதலில் ஆளுநர்.. இப்போது அமலாக்கத்துறை.. லோக்சபா தேர்தலில் எங்க வேலை சுலபம்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக ஆளுநரும், அமலாக்கத்துறையும் திமுகவிற்காக லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் எங்களின் வெற்றி எளிதாகிவிடும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பொன்முடி வீட்டின் அனைத்து அறைகளிலும், கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார்களில் உள்ள ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே பெங்களூருவில் எதிர்கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சியினர் கூட்டத்தால் பாஜக எரிச்சலில் உள்ளதாக கூறினார். அமலாக்கத்துறை சோதனையால் லோக்சபா தேர்தலில் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் சுலபமாகிவிடும் என்றும் கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே திமுகவிற்காக பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் இணைந்து லோக்சபா தேர்தல் வெற்றிக்காக திமுகவிற்காக பிரச்சாரம் செய்வதாகவும் கூறினார். எந்த சோதனை நடந்தாலும் அதைக்கண்டு அச்சப்படப்போவதில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கையும், அமலாக்கத்துறை சோதனையையும் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இது லோக்சபா கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை காவிரி நதிநீர் தொடர்பானதல்ல என்று கூறினார். மேகதாட்டு அணை கட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications