திருக்குறளுக்கு உரை எழுதிய வைரமுத்து.. ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியிட்ட ஸ்டாலின்
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய ‛வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நூலை நூலாசிரியர் வைரமுத்து முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பெற்று கொண்டார்.
திருக்குறள்.. உலக பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது. அதிகாரத்துக்கு 10 குறள்கள் என்று மொத்தம் 1330 திருக்குறளை வள்ளுவர் இயற்றி உள்ளார். மனிதனின் வாழ்வியலுக்கு தேவையான அதேவேளையில் எந்த காலத்துக்கும் பொருந்தும் வகையான கருத்துகள் திருக்குறளில் உள்ளன.

இந்த திருக்குறள் அறம், பொருள், இன்பம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதி உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோர் திருக்குறளுக்கு உரை எழுதி உள்ளனர்.
அந்த வரிசையில் திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கி வெற்றிகரமாக முடித்தார். அந்த உரையை நூலாக அச்சிடப்பட்டது. இதற்கு 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டுள்ளார். இந்த ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். வைரமுத்து முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' புத்தகத்தை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் பெற்று கொண்டார்.
இந்த விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வைரமுத்து ஏற்புரை வழங்கினார். ‛திருக்குறள் மறை வைரமுத்து உரை' என்று வைரமுத்துவின் 40வது நூலாகும்.
இந்த நூல் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இன்று நூல் வெளியீட்டு விழாவையொட்டி மட்டும் அரங்கில் இருந்தவர்களுக்கு ரூ.200க்கு இந்த நூல் வழங்கப்பட்டது. இந்த ‛திருக்குறள் மறை வைரமுத்து உரை' நூலில் காமத்துப்பாலுக்கு மட்டும் கவிதை நடையில் உரை எழுதி உள்ளார். அறத்துப்பால், பொருட்பாலில் வரும் குறள்களுக்கு வழக்கம்போல் உரை எழுதி இருக்கிறார்.
முன்னதாக இன்று காலையில் வைரமுத்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வைத்து பூத்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications