”மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை” வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
தமிழக மீனவர் படகை துளைத்த 47 குண்டுகள்..இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..கடற்படை அதிகாரிகள் ஆய்வு
7 மீனவர்கள் கைது
அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மைக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் கிளின்டன், அந்தோனி, வினிஸ்டன், மோசஸ், மரியான், வேல்ராஜ், அந்தோனி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 மாதத்தில் 10வது முறை
கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களுக்கு அச்சுறுத்தல்
ஏற்கனவே 98 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.