மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியா.. மக்கள் முடிவு அப்படியில்லையே.. பிரவீன் சக்கரவர்த்தி!
சென்னை: மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று சொன்னவர்களுக்கு மக்கள் அப்படி இல்லை என்று பதில் அளித்துவிட்டார்கள் என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். விஜய்யின் பெருந்தன்மையாக காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை கிடைத்துள்ளதாக கூறிய பிரவீன் சக்கரவர்த்தி, இனி களத்தில் இறங்கி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 12 நாட்களாகி இருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் தவெக எம்எல்ஏ-க்கள் 21 பேரும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2 பேர் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜேஷ் குமார் சுற்றுலா துறை அமைச்சராகவும், விஸ்வநாதன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் அதிகளவில் போட்டியிட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விடவும் இம்முறை பின்னடைவை சந்தித்துள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. ஆனால் சூழ்நிலை மற்றும் முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை காரணமாக 2 அமைச்சரவை கிடைத்துள்ளது. இதுவொரு ஆரம்பம் தான்.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள்.. அனைவருக்கும் சொல்வது ஒன்றுதான்.. இது வெறும் ஆரம்பம் தான்.. கட்சியை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.. மக்களை களத்தில் இறங்கி சந்திக்க வேண்டும். அடுத்தது உள்ளாட்சித் தேர்தல் உள்ளது. தேர்தலுக்கு முன்பாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும்.
இனி களத்தில் பணியாற்ற விட மறுக்கிறார்கள் என்ற புகாரே வரக்கூடாது. மத்தியில் கூட்டணி ஆட்சி.. தமிழ்நாட்டில் சுயாட்சி என்று முழங்கினார்கள். ஆனால் தமிழக மக்கள் நாங்களும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்வோம் என்று பதில் அளித்துள்ளார்கள். எந்த கட்சிக்கும் தனித்த மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஜனநாயகத்தை நாம் ஏற்க வேண்டும். தவெக கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications