நிச்சயம் ஒரு முறை அமெரிக்கா வருவேன்! தமிழ்ச் சங்கத்திடம் உறுதி கூறிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான "ஃபெட்னா" அமைப்பின் 35-வது ஆண்டு விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முறையாவது உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவுக்கு வருகிறேன் என்ற உறுதியை அளித்துள்ளார்.
Recommended Video
இந்த முறையே பெட்னா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா வருவதற்கு தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இங்குள்ள பணிச்சூழல் காரணமாக தன்னால் வர இயலவில்லை எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை வைத்து பார்த்தால், விரைவில் அவர் அமெரிக்காவுக்கு ஒரு டிரிப் அடித்து அங்குள்ள தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய பெட்னா மாநாட்டில் முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
தொழில் துறையில் ஸ்மார்ட் மாநிலம்..விரைவில் நம்பர்.1 ஆக தமிழகத்தை மாற்றுவோம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி
நேரில் வருமாறு அழைப்பு
''கொரோனா காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை தமிழ்நாடு மறக்கவில்லை. ஏன் நானும் மறக்கவில்லை. அப்போதே, இதன் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி நான் காணொலியில் பேசியிருக்கிறேன். அப்போதே, என்னைச் சந்தித்த ஃபெட்னா அமைப்பாளர்கள், "இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில், ஃபெட்னா சார்பில் மிகப்பெரிய விழா நடக்க இருக்க இருக்கிறது. இது ஃபெட்னாவின் 35-ஆவது ஆண்டு விழா. அந்த விழாவின்போது கலந்து கொள்ள வேண்டும்"என்று என்னிடம் ஒரு அன்பான கோரிக்கையை வைத்தார்கள்.''
அமெரிக்கா வருவேன்
''கலந்து கொள்ளலாம் என முதலில் நான் திட்டமிட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட இந்த நாட்களில் வர இயலாத சூழல் இருந்ததை அமைப்பாளர்களுக்கு நான் எடுத்துச் சொன்னேன். இம்முறை வரவில்லை என்றாலும், நிச்சயமாக ஒரு முறை உங்கள் மாநாட்டில் கலந்து கொள்வேன் என்ற உறுதியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.''
தமிழர் என்ற உணர்வு
''சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் - தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம்.''
தமிழகம் வாருங்கள்
''நம்மை நாடுகள் பிரிக்கலாம், நிலங்கள் பிரிக்கலாம், ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம் தமிழினத்தைக் காப்போம். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே வந்து சந்திப்பேன். நீங்களும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்ற அன்பான அழைப்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.''