என் கவனம் முழுக்க இதில் தான்.. யாருக்கெல்லாம் அவசியமோ அவர்களுக்கு ரூ.1000 நிச்சயம்.. ஸ்டாலின் உறுதி!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனமும் உள்ளது, எந்தச் சிக்கலும் இன்றி பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும். இத்தகைய உயர்பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள் என்றார்.

மேலும், உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக பணியாற்ற வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம்தான் மேம்படும். மக்களிடம் கனிவாக பழகுங்கள் அவர்கள்தான் நமது உண்மையான மேல் அதிகாரிகள். மக்களிடம்தான் நாம் நன்மதிப்பை பெற வேண்டும் என அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனமும் உள்ளது. எந்தச் சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளோம். 1 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்க இருக்கிறோம். பெண்களுக்குப் பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications