மோடி பேச்சை ரசித்தேன்.. சிரித்தேன்.. முதல்வர் ஸ்டாலின் பேசப் பேச.. அடக்க முடியாமல் சிரித்த பொன்முடி!
சென்னை: பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,400 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர், ஸ்பெயினில் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பல்வேறு முன்னணி தொழில் நிறுவன பிரமுகர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தில் ரூ.3,400 கோடி அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில், இன்று ஸ்பெயினில் இருந்து தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாரே, அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பாஜக எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும் தொடர்ந்து பேசி வருகிறார் மோடி. ஆளுங்கட்சியாக வந்தது முதல், அவர் எதிர்க்கட்சி ஆக காங்கிரஸ் கட்சியை அட்டாக் செய்வது போல பேசி வருகிறார். இதுதான் புரியாத புதிராக உள்ளது" என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 இடங்களை கைப்பற்றுவோம் என பிரதமர் மோடி பேசியுள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "மொத்தம் 400 தானா? மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. மோடி 543 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனச் சொன்னாலும் ஆச்சர்யமில்லை." எனத் தெரிவித்தார். முதல்வரின் கமெண்ட்டால் அவருக்கு பின்னால் நின்றிருந்த பொன்முடி உள்ளிட்டோர் அடக்க முடியாமல் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications