40 லட்சம் பேருக்கு உதவித்தொகை.. ஸ்டாலின் ஆக்ஷனை யாராலும் விமர்சிக்கவே முடியாது.. தராசு ஷ்யாம்!
சென்னை: விளிம்பு நிலையில் இருக்கும் சுமார் 40 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பில் எதிர்க்கட்சிகளால் விமர்சனம் வைக்க முடியாது என்று கூறிய தராசு ஷ்யாம், முதியோர் உதவித்தொகை உயர்வு என்பது பல கால கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 1.31 கோடி மகளிருக்கு 3 மாதத்திற்கான மகளிர் தொகை மற்றும் கோடை கால சிறப்பு நிதியாக ரூ.2,000 என்று மொத்தமாக ரூ.5,000 தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில் முதல்வர் ஸ்டாலினின் பிரம்மாண்ட அறிவிப்பாக இது அமைந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மகளிர் பலரும் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பேருக்கு பயனாளிகளுக்கு தலா ரூ.3200, 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500, பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ ரூ.2 ஆதார விலை என 8.53 கோடி நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், இது வரவேற்புக்குரியது. 60 வயதிற்கு மேல் உள்ள முதியோருக்கு நாம் உதவித்தொகை வழங்கி வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இவர்கள் என்று சொல்ல முடியும். இவர்களுக்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கைகளில் ஒன்று. இதனை தேர்தல் கால அரசியல் என்றும் சொல்லலாம்.
முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பரிசு என்றும் சொல்லலாம். அதேபோல் கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு கலைஞர் காலத்தில் இருந்தே இந்த திட்டம் உள்ளது. அனைத்து அரசுகளும் கொடுத்து வருகின்றன. மீனவர்களுக்கான நிதி உதவி என்பது மீனவ சங்கங்களின் கோரிக்கை.. முதியோர் தொகை நீண்ட காலமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க முடியாது. ஏனென்றால் முதியோர் உதவித்தொகை, மீனவர்களுக்கு உதவித்தொகை, நீலகிரி தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட எதிலும் விமர்சனம் வைக்க முடியாது. இதன் நோக்கம் பங்கேற்பார்களை பெருக்குவது தான்.. பயனாளிகளை பெருக்குவது அல்ல என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications