"ஒட்டுண்ணி பாஜக!" எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி கொடுத்த முக்கிய அசைன்மென்ட்! ஸ்டாலின் கடும் விமர்சனம்
ராமநாதபுரம்: கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மென்ட்டை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக கொடுத்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும், தாக்கப்படும், கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவில்லை.
தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே பாஜக அரசுக்கு கசக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு அரசியல் ஆதாயம் தேட விசாரணைக் குழுவை அனுப்பியது. மணிப்பூர் கலவரம், கும்பமேளா உயிரிழப்புகளுக்கு விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக, தற்போது கரூருக்கு அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் மீது அக்கறை இல்லை
அதற்காக அவர்களுக்கு தமிழகத்தின் மீது அக்கறை கிடையாது. அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா உருட்டலாமா என கரூருக்கு விசாரணை குழுவை அனுப்பியுள்ளது. அது போல் பல்வேறு பேரிடர்கள் தாக்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த போது வராத, நிதி தராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது கரூருக்கு வந்துள்ளார்.
ஒட்டுண்ணி
யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழத் துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது. மாநில உரிமைகளை பறித்துவிட்டனர். கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மென்ட் எடப்பாடிபழனிசாமிக்கு பாஜக வழங்கியுள்ளது.
அடிமை சாசனம்
பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளது அதிமுக. தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பவர்கள் யாரும் பாஜக கூட்டணிக்குச் செல்லமாட்டார்கள். தவறு செய்வோ் அதில் இருந்து தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங்மெஷின்தான் பாஜக. தன்னை உத்தமராக்கிக் கொள்ள அதில் குதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓரவஞ்சனை
நிதி பகிர்விலும் ஓரவஞ்சனை, பள்ளிக் கல்வித் திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள். பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படியளக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ராமநாதபுரத்தில் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆய்வு செய்த முதல்வர்
இதையடுத்து சாலை மார்க்கமாக மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு சென்றார். அங்கு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆலோசனை
இதையடுத்து ராமநாதபுரத்திற்கு முதல்வர் புறப்பட்டுச் சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நலத்திட்டங்கள்
இதையடுத்து பேராவூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ரூ 134 கோடி மதிப்பில் 150 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அது போல் ரூ 176 கோடியில் 109 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 50,752 பயனாளிகளுக்கு ரூ 42.68 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications