காந்தி பெயரை நீக்க கூடாதுனு உங்க டெல்லி ஓனரை கேட்டீங்களே! மதிச்சாங்களா? இபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கக் கூடாதுனு உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீங்களே டெல்லி உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?

#MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?
உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.
மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.
மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சதிகாரமும் கைவிடப்படவில்லையே?
டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.
வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. அதற்கு விபி ஜி ராம் ஜி என்ற பெயரையும் மாற்றியுள்ளது.
காந்தியின் பெயரை மத்திய அரசு மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் திட்டங்களுக்கு வைத்தால் எப்படி என தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பியும் அந்த மசோதா நிறைவேறியது.
125 நாட்கள் வேலை திட்டத்தால் மக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.












Click it and Unblock the Notifications