10 மாதங்களில் திமுக செய்த சாதனையை யாரும் செய்தது இல்லை.. 505 வாக்குறுதிகளும் நிறைவேறும்: ஸ்டாலின்
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விளம்பர நோக்கில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்றும் 537 அறிவிப்புகள் நிலுவையில் இருக்கிறது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை 10 மாதங்களில் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது என்றும் அதற்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுவது 10 மாத குழந்தையிடம் 10-ம் வகுப்பு மதிப்பெண் என்ன எனக் கேட்பது போல் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

சட்டப்பேரவை
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி புள்ளி விவரத்துடன் பேசத் தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு புதிய தகவல்களை வெளியிட்டார். அதன்படி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளதாக கூறினார்.

நிதி விடுவிக்கவில்லை
மேலும், அதில் 26 அறிவிப்புகள் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெரிந்தும் விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்டு அது கைவிடப்பட்ட தகவலையும் முதல்வர் வெளியிட்டார். இதேபோல் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 20 திட்டங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணையே பிறப்பிக்கப்படவில்லை என்றும் 143 அறிவிப்புகளுக்கு அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டு கடந்த அதிமுக அரசு நிதியே விடுவிக்கவில்லை என்ற தகவலையும் பேரவையில் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

10 மாத குழந்தை
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது என்றும் அதற்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுவது 10 மாத குழந்தையிடம் 10-ம் வகுப்பு மதிப்பெண் என்ன எனக் கேட்பது போல் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த 10 மாத குழந்தை (திமுக ஆட்சியை சொல்கிறார்) பத்தாம் வகுப்பில் மட்டுமல்ல பட்டப்படிப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விருதுநகர் விவகாரம்
அதைத் தொடர்ந்து விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை மையமாக வைத்து அதிமுக கேள்வி எழுப்பியதால் அதற்கு பதிலளித்த முதலவர் ஸ்டாலின், பொள்ளாச்சி வழக்கு போலோ, வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்குப்போலோ விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு இருக்காது என்றும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இந்தியாவிலேயே மிக வேகமாக முடிக்கப்பட்ட வழக்காக இருக்கும் எனவும் உறுதிக்கூறினார்.












Click it and Unblock the Notifications