நிமிர்ந்து நின்ற சூர்யா.. கார்த்தி சொன்ன ஒரு வார்த்தை.. மறுநாளே கிரீன் சிக்னல் தந்த முதல்வர்.. செம!
சென்னை: ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நடிகர்கள் சூர்யா, கார்த்தி குரல் கொடுத்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த மசோதாவிற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
Recommended Video
சமுதாயத்தில் நடக்க கூடிய அநீதிகளுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே நடிகர் சூர்யாவின் குடும்பம் குரல் கொடுத்து வருகிறது. நீட்டிற்கு எதிராக பல்வேறு கட்டுரைகளை நடிகர் சூர்யா எழுதி இருக்கிறார். தஞ்சாவூரில் மருத்துவமனை மோசமாக இருந்ததை சுட்டிக்காட்டியவர் நடிகை ஜோதிகா.
முதல்வர் ஸ்டாலின்கொரோனா நிவாரண நிதி கேட்டதும் உடனடியாக முதல் ஆளாக நடிகர் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர்தான் குடும்பமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தனர். இப்படி தொடக்கத்தில் இருந்து சமுதாய அவலங்களுக்கு எதிராக முதல் ஆளாக நடிகர் சூர்யாவின் குடும்பம் நின்று இருக்கிறது.

எதிர்ப்பு
புதிய கல்விக்கொள்கை தொடங்கி பல்வேறு விஷயங்களை எதிர்த்து வந்த சூர்யாவும், கார்த்தியும் தற்போது ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவையும் எதிர்க்க தொடங்கி உள்ளனர். ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் திரண்டு உள்ளனர். இயக்குனர் வெற்றிமாறன், கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா, விஷால் ஆகியோர் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

முதல் குரல்
இந்த சட்ட திருத்த மசோதா தங்களின் உரிமையை மொத்தமாக பாதிக்கும். முறையாக படம் எடுக்க முடியாது. அரசுக்கு ஆதரவாக மட்டுமே படம் எடுக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவும். கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது இந்த மசோதா, என்று இயக்குனர் வெற்றிமாறன் குரல் கொடுத்துள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி தொடக்கத்தில் இருந்தே இந்த சட்டத்திற்கு தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள்.

கருத்து
சூர்யா இந்த சட்டத்திற்கு எதிராக நிமிர்ந்து நின்று குரல் கொடுத்தார். இது எங்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றார். விளைவு பாஜக இவருக்கு எதிராக தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு சென்றது. பல முன்னாள் நடிகர்கள், நடிகைகள் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டு பாஜக, சினிமா நடிகர் ஒருவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இதுவே முதல்முறை. சூர்யா ஒரு பக்கம் இந்த சட்டத்திற்கு எதிராக திமிறி எழுந்த போது இன்னொரு பக்கம் கார்த்தி இன்னொருபடி மேலே போய் நேராக முதல்வர் ஸ்டாலினையே சந்தித்துவிட்டார்.

சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த கார்த்தி இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மற்ற கோலிவுட் சங்க நிர்வாகிகளும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின் பேசிய கார்த்தி, தமிழ்நாடு அரசு போலவே "ஒன்றிய" அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி பேட்டி கொடுத்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் மிகப்பெரிய ஆபத்து கொண்டது.

ஆபத்து
இது எங்கள் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறது. எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுவோம். இது எங்களுடைய உரிமைக்கான ஒரு குரல். தமிழ்நாடு அரசு ஆதரவு கொடுப்பதாக எங்களிடம் கூறியுள்ளது என்று கார்த்தி குறிப்பிட்டார். இந்த நிலையில், இந்த சந்திப்பிற்கு மறுநாளே, ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்
சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது. சினிமாவின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது இந்த சட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று மறுநாளே முதல்வர் ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

சூர்யா, கார்த்தி
சூர்யா, கார்த்தி ஆகியோர் இதற்கு எதிராக குரல் கொடுத்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அவர்கள் உடன் நிற்கும் முடிவை எடுத்துள்ளார். முதல்வரின் இந்த முடிவை தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். எங்களின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி, உடனடியாக எங்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தற்கு நன்றி, என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாக்கு
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் திமுக எம்பிக்கள் ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை. இரண்டு அவையிலும் வெளிநடப்பு செய்யாமல் திமுக எம்பிக்கள் எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசும், திமுக எம்பிக்களும் இந்த பிரச்சனையில் திரையுலகினர் பக்கம் நிற்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications