"திராவிடத்தால் வாழ்கிறோம்.." பிரிட்டனில் அழுத்தமாக சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். அதில் பல்வேறு தொழில் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், அங்குள்ள தமிழர்களையும் சந்தித்து வருகிறார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார்.
ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை ஈர்க்கத் தமிழ்நாட்டிற்குப் பல வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகிறது. இந்த வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பக்கம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடுகளைக் கொண்டு வர முயல்கிறது. மற்றொரு பக்கம் வெளிநாடுகளுக்கே சென்றும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
அதன் ஒரு பகுதியாகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்றிருந்தார். ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்குச் சென்ற அவர், பல்வேறு தொழில் நிறுவன நிர்வாகிகளைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இந்தப் பயணத்தில் அங்குள்ள தமிழ் சமூகத்தினரையும் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார்.
ஸ்டாலின் ட்வீட்
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்புகிறார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது! அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட வெளிநாட்டு வாழ் தமிழ் சமூகத்திற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்" என்றார்.
தமிழர்கள்
முன்னதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அங்கு வாழும் தமிழர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அண்டை பகுதிகளில் இருந்து வந்திருக்கும் தமிழர்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடின உழைப்பாளிகள் என்பதை நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள். திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமையோடு சொல்லும் தமிழர்களைப் பார்க்கிறேன். இங்குள்ள தமிழர்களைப் பார்ப்போருக்குத் தமிழ்நாடு மீது நல்ல ஒரு அபிப்பிராயம் தோன்றும். நீங்கள் தான் தமிழகத்தில் அறிவிக்கப்படாத தூதர்கள்.
நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றாலும் உங்களுக்குள் தமிழ்நாடு கலந்தே இருக்கிறது. அதைப் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறை தமிழர்கள் நம்மை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். உங்களால் முடிந்த தொகையைத் தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்.. இங்குள்ள வேலைவாய்ப்புகள் குறித்து தமிழ்நாட்டு இளைஞர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்கும் உங்கள் கதவுகளைத் திறந்து விடுங்கள்.
எப்போது திரும்புவார்
சாதி, மதம், ஏழை, பணக்காரர் போன்ற வேறுபாடுகள் நம்மை பிரிப்பது மட்டுமின்றி, நம் இனத்தையும் வளர விடாது. நம்மை எதுவெல்லாம் பிரிக்கிறதோ அதை நாம் மறக்க வேண்டும். எவை எல்லாம் இணைக்கிறதோ அதைத் தான் மதிக்க வேண்டும்" என்றார். முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அல்லது நாளை காலை தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விமான நிலையத்திலேயே முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் விளக்குவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications