உங்களுடன் ஸ்டாலின்.. மகளிர் உரிமை தொகை பற்றி மருத்துவமனையில் இருந்தபடியே.. ஸ்டாலின் கேட்ட கேள்வி!
சென்னை: சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.7.2025) மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் மற்ற சேவைகள் தொடர்பாக அவர் விசாரித்தார். கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஸ்டாலின் சிகிச்சை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 21, 2025) முதல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே, தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார் என்று தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தலைமைச் செயலாளர் என். முருகானந்தத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விசாரித்தார்," என்று கூறப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார். நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமிற்கு போனால் உங்கள் தேவைகளை உடனடியாக தீர்க்கும்படி எல்லா துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆதார் நம்பர், ரேஷன் கார்டு, மொபைல் நம்பர், பேங்க் பாஸ்புக் இதை மட்டும் கொண்டு வந்தால் போதும்.. இந்த முகாமில் எளிதாக ஒரு ரூபாய் செலவு பண்ணாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
ஜூலை 22ஆம் தேதி வரை, இந்தத் திட்டத்தின் கீழ் 5.74 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்களில் எத்தனை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்துள்ளன என்பது குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். முகாம்களை திட்டமிட்டபடி நடத்தி, பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறும் அறிவுறுத்தினார்.
72 வயதான முதலமைச்சர் ஸ்டாலின், திங்களன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்கவும், சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்திலும் அரசுப் பணிகளைத் தொடருவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்குச் செல்லவிருந்த தனது பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications