டபுள் எஞ்சின் எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
சென்னை: தமிழ்நாட்டில் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் ஓடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு டபுள் எஞ்சின் அரசு தேவை என்று பிரதமர் மோடி பேசி இருந்த நிலையில், தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ்நாடு திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விரும்புகிறார்கள். மேடையில் உள்ள நண்பர்கள் ஒரே உறுதிப்பாட்டில் இங்கு கூடியுள்ளனர்.

திமுக அரசு ஒரு CMC அரசு.. அதாவது கலெக்ஷன், மாபியா, கரப்ஷன் அரசு.. திமுகவை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். தமிழக வளர்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திமுக அரசு இளைஞர்களை போதை கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது. அவர்களை மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தை மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும்.
இந்தியா இன்று உலக முதலீட்டார்களின் விருப்பமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு டபுள் எஞ்சின் அரசு தேவை.. மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றும் அரசு இங்கு எப்போது வருகிறதோ, அப்போதுதான் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். தமிழ்நாட்டில் குற்றங்களால் மோசமான பாதிப்பு பெண்களுக்கு தான் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் டபுள் எஞ்சின் அரசு என்ற பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே.. மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டெல்லியின் ஆணவத்திற்கு தமிழ்நாடு தலைகுனியாது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications