ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.. "இதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறேது".. நெகிழ்ந்து போன கொளத்தூர்
: கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே விசிட் அடித்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.. அத்துடன் இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.
கொளத்தூர் என்பது ஸ்டாலின் செல்ல தொகுதி.. கடந்த காலங்களில் ஏராளமான நலத்திட்டங்களை அந்த தொகுதிக்கு செய்து வைத்துள்ளார்.. திமுகவின் கோட்டையும்கூட..
ஆரம்ப காலங்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு வந்தாலும், இதற்கு பிறகு கொளத்தூரிலேயே முழு கவனத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் செலுத்த தொடங்கினார்.

சவால்
அதனால்தானே என்னவோ, திடீரென கடந்த சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலினை கொளத்தூரில் நேரடியாக போட்டியிட்டு வீழ்த்துவேன் என்று சீமான் சவால் விட்டிருந்தார்.. இறுதியில் தன் முடிவில் இருந்து பின்வாங்கி வேறு இடத்தில் போட்டியிட்டார்.. சட்டமன்ற தேர்தலில், ஸ்டார் தொகுதிகளின் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சில விவரங்களை வெளியிட்டிருந்தார்.

பரபரப்பு
அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன... அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கூறினார். இதுதான் பெருத்த சலசலப்பையும், பரபரப்பையும் அப்போது அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. ஸ்டாலின் தொகுதியிலேயே இவ்வளவுதான் வாக்குப்பதிவா? திமுக மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனரா என்பன போன்ற சந்தேகங்களையும் சிலர் ஏற்படுத்தியிருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்
இந்நிலையில், இதே கொளத்தூர் தொகுதியில் தன்னுடைய பெருத்த கவனத்தை முதல்வர் ஸ்டாலின் செலுத்த தொடங்கி உள்ளார்.. நேற்றைய தினம் திடீரென கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி உள்ளார். இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில், "ரூ.97.49 லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், மைதானம், பூங்காவைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

கலையரங்கம்
செம்பியம், ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார், திரு.வி.க. நகர், 5-வது தெருவில் 7,500 சதுர அடி பரப்பளவில், ரூ.56 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டுக் கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவைத் தமிழக முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்" என்பன போன்ற நலத்திட்டங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

மகிழ்ச்சி வேறேது
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கிய பின் கொளத்தூர் விசிட்.. கோரிக்கைகள் வைத்த எனது கொளத்தூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களது மகிழ்ச்சியில் பங்கெடுத்தேன். சிலரது வீடுகளுக்குச் சென்று மனுக்கள் பெற்றேன். உங்களுக்குப் பணியாற்றுவதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறேது!? என்று பதிவிட்டுள்ளார்.

வரவேற்பு
இந்த ட்வீட்தான் தொகுதி மக்களுக்கு பூரிப்பை தந்து வருகிறது.. முதல்வராக பதவியேற்று பல்வேறு பணிகள், இருந்தபோதிலும், சொந்த தொகுதியின் வளர்ச்சி திட்டத்தில், முன்பு போலவே பிரத்யேக கவனம் செலுத்தி வருவது நெகிழ்ச்சியை தந்து வருவதாக பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த ட்வீட்டில் வேறு சில கோரிக்கைகளையும் பொதுமக்கள் வைத்து வருகின்றனர்..

முக்கிய கோரிக்கைகள்
"முதல்வர் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள், ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் பலர் வெளியூரில் இருப்பதால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வாங்க வழிவகை செய்யவும் என்றும், வாரிசு அடிப்படை வேலைகளும் , மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கு வந்த, கருணை அடிப்படை வேலைகளும், நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளன.. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்பன உட்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications