டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து! பெரியாரை தேவையின்றி வசைப்பாடுவது நியாயமல்ல.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகியுள்ள டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் பெரியாரை தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிறந்த பாடகர்
டி.எம்.கிருஷ்ணா அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
#TMKrishna எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக இசை என்பது ஒரு குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே என இருந்ததை மாற்றி அதை சமநிலைப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருபவர் டி.எம்.கிருஷ்ணா. இவர் மீனவர்கள் குடியிருப்புகளில் இசை நிகழ்ச்சியை நடத்துவார். அவர்களையும் சேர்த்துக் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இதற்கு சில கர்நாடக இசை கலைஞர்கள் கடுமையாக எதிர்த்தனர். அது எப்படி மீனவ குடியிருப்புகளில் இசை கச்சேரி நடத்தலாம் என கடுமையான விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் கர்நாடக இசையை எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்கான முயற்சியை எடுத்து வரும் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியோர் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம். கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் மியூசிக் அகாதெமி மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து நாங்கள் விலகுகிறோம். இந்த நிகழ்வையே புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications