தேர்தல் பணிகள் முடிந்தது.. ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்.. குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் முதல்வர்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு ஸ்டாலின் 4 நாட்கள் வரை தங்கி ஓய்வெடுக்க திட்டம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது. வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும், வாக்கு எண்ணிக்கை இயல்பான அளவிலேயே உயர்ந்துள்ளது. மொத்தமாக 4.88 கோடி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதேபோல் தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டார். சட்டசபைத் தேர்தல் பணிகளுக்காக ஓய்வுன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், தேர்தல் முடிவடைந்த இரவே உடனடியாக வெளிநாடு புறப்பட்டார்.
அதேபோல் ஸ்டாலின் திடீரென சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் நேரில் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தலின் போது நடந்த விஷயங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட சூழலில், குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வரும் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில், முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் வரை குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்காக கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரும், ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஊட்டி சென்று தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்தார். இந்த முறை கொடைக்கானல் செல்கிறார். இதனால் திமுகவினரும் சுற்றுலா செல்ல முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications