தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்! இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை தேவை! முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த 15ஆம் தேதி இதேபோல ஒரு சம்பவம் நடந்தது.
நாகை மீனவர்கள் சிலர் நாட்டுப்படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது இரும்புக் கம்பி, கட்டை சுத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சருக்குக் கடிதம்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கடிதம்
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று (20-2-2023) கடிதம் எழுதியுள்ளார்.

தாக்குதல்
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, சுத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள்
இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர். எடுத்துச் சென்றுவிட்டதாகவும். காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை தேவை
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசு இதைக் கவனத்தில் கொண்டு. எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications