வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பாக கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மாநிலத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கிய பிரதமருக்கு நன்றி. கடந்த கால பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும். தமிழகத்தில் நடத்தப்பட்ட இரு மெகா முகாம்களில் 45.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அது போல் இந்த மாதம் முதல் 19 தேதியில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவற்றுடன் சேர்த்து இதுவரை 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில்
தடுப்பூசி போட தொடங்கியதால் தான் தமிழகத்தில் கொரோனா கேஸ்களின் தேசிய அளவிலான சராசரியில் தமிழகம் குறைந்துள்ளது. வழக்கமாக தடுப்பூசி போடுவது எண்ணிக்கையுன் கூடுதலாக மெகா முகாம்களையும் தமிழ்நாடு நடத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் எளிதாக வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் போட முடியும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 2ஆவது அலையை போல் மூன்றாவது அலை மிகவும் தீவிரமாகாமல் இருக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

தடுப்பூசி முகாம்கள்
அதன்படி வாரந்தோறும் தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது. அந்த வகையில் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அபார்ட்மென்ட்கள், முக்கிய சந்திப்புகள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

20 லட்சம் தடுப்பூசி
இந்த முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அன்றைய தினம் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தார். இனி வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்றைய தினமும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நேற்றைய தினம் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசிகளை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொரோனா சங்கிலி
நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசியை போட்டால் மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என்பதால் தமிழக அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications