விஜய் அதிரடி உத்தரவு.. தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி இவர் கையில்.. Guidance Tamil Nadu-க்கு புது தலைவர்!
சென்னை:தமிழ்நாட்டு வளர்ச்சியிலும், புதிய முதலீடுகளை மாற்ற மாநிலங்களுக்கு முன்பு போட்டிப்போட்டு பெறுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த தாரேஸ் அகமது சில நாட்களுக்கு முன்பு வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டார், இந்த நிலையில் இப்பதவிக்கு வருபவர் யார் என்ற கேள்வி அரசு நிர்வாகத்தில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு தொழிற்துறையினர் மத்தியிலும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றம் தொடர்பான புதிய நியமன ஆணை வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் சர்வே மற்றும் செட்டில்மென்ட் பிரிவின் இயக்குநராக இருந்த தீபக் ஜேகப் ஐஏஎஸ் அதிகாரி, இப்போது கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (MD & CEO) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான கட்டத்தில் வந்துள்ளது.

கைடன்ஸ் தமிழ்நாடு மிகப்பெரிய சக்சஸ் டிராக் ரெக்கார்ட்-ஐ வைத்திருக்கும் நிலையில், தீபக் ஜேகப் இதை தொடர வேண்டும். மேலும் இப்புதிய பொறுப்பில், தற்போது மாநிலத்தின் தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சியை வேகப்படுத்தி முதல்வர் விஜயின் 2036க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்தும் இலக்கை அடைவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
முன்னாள் எம்டி-யின் இடமாற்றம்
தீபக் ஜேகப்-க்கு முன்பு கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் எம்டி & சிஇஓவாக இருந்த தாரேஸ் அகமது, தற்போது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் மாற்றம், அரசின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
கைடன்ஸ் தமிழ்நாடு என்றால் என்ன?
கைடன்ஸ் தமிழ்நாடு என்பது 1992-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட முக்கிய நிறுவனமாகும். இது மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்க விரும்புவோர் மற்றும் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் வழங்கும் 'ஒற்றைச் சாளர அமைப்பு' (Single Window Portal) ஆக செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொள்வது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு (Global Investors Meet) போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது ஆகியவை இந்த நிறுவனத்தின் முக்கியப் பணிகளாகும். இதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில் மையமாக மாற்றுவதில் கைடன்ஸ் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
புதிய எம்டி.யின் முக்கிய பொறுப்புகள்
தீபக் ஜேகப் புதிய பொறுப்பில் மாநிலத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பார். தொழில் துறையின் விரிவாக்கம் மற்றும் அரசின் கொள்கைகளை சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் தொழில் சூழலை மேலும் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் நிலையில், கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் புதிய தலைமை பொறுப்புக்கு தீபக் ஜேகப் ஐஏஎஸ் வருவது மாநிலத்தின் முதலீட்டு சூழலுக்கு புதிய உத்வேகம் அளிக்கும். இந்த நிறுவனம் தொடர்ந்து மாநிலத்தின் முதலீட்டு அமைப்பு மற்றும் தொழில் மாற்றத்துக்கு முக்கிய சக்தியாகச் செயல்பட்டு வருகிறது.
மற்றொரு அதிகாரிகள் மாற்றம்
இதே அதிகாரிகள் மாற்ற உத்தரவில், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரஜேந்திர நவ்னித் இடத்துக்கு பதிலாக இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். பிரஜேந்திர நவ்னித் இந்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் மாற்றங்கள், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை மேலும் திறமையாகவும் வேகமாகவும் செயல்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபக் ஜேகப் ஐஏஎஸ் தலைமையில் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய உயரங்களைத் தொடும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications