விஜய் அமைச்சரவையில் "இவர்" ஒருத்தர் மட்டும் தான் கோடீஸ்வரர் இல்லை! பணக்கார அமைச்சர் யார் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முதல்வராக நேற்றைய தினம் விஜய் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விஜய் அமைச்சரவையில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு என்ன.. விஜய்யுடன் அமைச்சரவையில் இப்போது இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே கோடீஸ்வரர் இல்லை.. அவர் யார் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
தமிழகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கும் முதலமைச்சர் விஜய், நேற்று பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விஜய்யின் இந்த அமைச்சரவையில் முன்னாள் அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் உள்ளனர். இந்த 9 அமைச்சர்களின் சொத்து மதிப்பு, கல்வி மற்றும் கிரிமினல் பின்னணி குறித்து பார்க்கலாம்!

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா
விஜய்யின் நம்பிக்கை நிழலாக வலம் வருபவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். தி.நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குள் நுழைந்து அமைச்சராகியுள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவருடைய சொத்து மதிப்பு 7.47 கோடி ரூபாயாகும். மேலும், ஆனந்தின் மொத்தக் கடன் 3.58 கோடி ரூபாயாக உள்ளது.
அடுத்து ஆதவ் அர்ஜுனா.. அமைச்சரவையிலேயே விஜய்க்கு அடுத்து 'பணக்கார அமைச்சர்' என்றால் அது வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ஆதவ் அர்ஜுனா தான். 534 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார எம்.எல்.ஏக்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் தான் தமிழகத்தின் பணக்கார எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதவ் அர்ஜுனா மீது ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.
அருண் ராஜ்
நிர்வாகத் திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண் ராஜை தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார் விஜய். வருமான வரித்துறையில் இணை ஆணையராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 12 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள இவர் மீது எந்தக் கிரிமினல் வழக்குகளும் இல்லை.
செங்கோட்டையன்
அதேபோல், அதிமுகவில் இருந்து வந்து தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையன், அனுபவக் கரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவர் பதவியேற்கும்போது விஜய் அமராமல் நின்றிருந்தது அவரது சீனியாரிட்டிக்கு கிடைக்கும் மரியாதை.. 10ம் வகுப்பு வரை படித்துள்ள செங்கோட்டையன் மீது 3 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவருடைய சொத்து மதிப்பு 15.72 கோடி ரூபாய்.
அதேபோல தவெக பொருளாளர் வெங்கட ரமணன் (மயிலாப்பூர்) 5.40 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற சி.டி.ஆர் நிர்மல்குமார் 26 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவரது பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது. சென்னை எழும்பூர் தொகுதியில் வென்ற ராஜ்மோகன் 2 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அதேபோல காரைக்குடி தொகுதியில் சீமானை வீழ்த்திய டாக்டர் பிரபு 11.39 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளார். இவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர் இல்லை
இறுதியாக, இந்த அமைச்சரவையிலேயே மிகக் குறைந்த சொத்து மதிப்பைக் கொண்டவராக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்திய எஸ். கீர்த்தனா இருக்கிறார். முதுகலை பட்டதாரியான இவருக்கு வெறும் 22 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்து உள்ளது. கிரிமினல் வழக்குகள் இல்லாத அமைச்சர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications