இருந்தாலும் சிஎம் ரொம்ப ஸ்ட்ரிக்டு! 10 மணிக்குள் அட்டனன்ஸ் போடும் ஆபிசர்ஸ்! தலைகீழான தலைமை செயலகம்!
சென்னை: சென்னைத் தலைமைச் செயலகத்தின் ஊழியர்கள் பலர் காலதாமதமாக பணிக்கு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காலை 10 மணிக்குள் அதிகாரிகள் பணிக்கு வர வேண்டுமென தமிழக முதலமைச்சர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றி இன்று காலை 10 மணிக்குள் தலைமை செயலகம் வந்துள்ளனர் அதிகாரிகள், சுமார் 90% தலைமை செயலக பணியாளர்கள் 10 மணிக்குள்ளாக பணிக்கு வருகை தந்ததாக சொல்லியுள்ளனர் உயர் அதிகாரிகள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 40-க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பல துறைகளில் பணியாளர்கள் தாமதமாக வருவதாகவும், அதனால் அலுவலக செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்துவிடுவதால், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் அதே நேர ஒழுங்கை பின்பற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் தங்களது இருக்கைகளில் இருக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக 10.10 மணி வரை மட்டுமே தாமதத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேல் தாமதமாக வந்தால் வருகைப் பதிவேடு மூடப்பட்டு, வராதவர்களாக பதிவு செய்யப்படலாம் அல்லது விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலக பணியாளர்களின் அதிகாரப்பூர்வ பணிநேரம் காலை 10.10 மணியில் தொடங்கி மாலை 5.45 மணிவரை இருக்கும் நிலையில், இப்போது நேர்த்தி மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 90 சதவீத பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பலர் தொடர்ந்து தாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை தமிழ்நாடு தலைமைச் செயலகம் வளாகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரத்திற்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய ஆட்சியில் நிர்வாக ஒழுங்கு, நேர்த்தி மற்றும் அலுவலக செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும், அவரே 10 மணிக்குள் வந்து விடுகிறார். இதனால் நாமும் வேலைக்கு வந்து விடுவோம் என அதிகாரிகளும் பணிக்கு வந்து விடுகின்றனர் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications