நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்!
சென்னை: நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தலைமை செயலகம் செல்லும் வழியில் தனது கான்வாய் வாகனங்களை நிறுத்திவிட்டு திடீரென காரில் இருந்து இறங்கிய முதல்வர் விஜய், சாலையோரம் நின்று இருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்துவிட்டு சென்றார். முதல்வர் விஜய்யை பார்த்த மக்கள் உற்சாகத்துடன் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகத்திற்கு தினமும் காரில் வந்து செல்கிறார். சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவு தினமும் பயணித்து தலைமை செயலகம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே விஜய்யை பார்க்க அவரது வீட்டில் இருந்தே கூட்டம் அதிக அளவில் திரண்டு நிற்கும்.

சாலையில் இறங்கிய விஜய்
தற்போது முதல்வரான பிறகும், அதே நிலையே நீடிக்கிறது. முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக வழி நெடுக தவெகவினரும், பொதுமக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் விஜய் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரங்களில் அவரை காண சாலையின் இரு பக்கத்திலும் மக்கள் தினம் தோறும் நிற்பதை பார்க்க முடியும்.
விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்னும் பின்னும் பாதுகாப்பு கான்வாய் வாகன அணிவகுப்புடன் சென்று வருகிறார். தன்னை பார்க்க காத்திருக்கும் மக்களை நோக்கி காரில் இருந்தபடியே கை அசைத்துவிட்டு செல்லும் முதல்வர் விஜய் இன்று, திடீரென காரில் இருந்து இறங்கி மக்களை வந்து சந்தித்தார். விஜய்யை பார்த்த ஆர்வத்தில் சாலையோரம் காத்திருந்தவர்கள் உற்சாகம் அடைந்து அவருடன் கை குலுக்கவும் செல்பி எடுக்கவும் முற்பட்டனர்.
hifi கொடுத்துவிட்டு சென்றார்
அங்கிருந்த மக்களை பார்த்து சிலரிடம் கை கொடுத்து விட்டு, கை அசைத்துவிட்டு உடனடியாக தனது காரில் ஏறி முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றார். முதல்வர் விஜய்யை பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். டிராபிக் நெரிசல் ஏற்படும் என்பதால் உடனடியாக விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வர் விஜய் பொதுமக்களை பார்த்துவிட்டு hifi கொடுத்துவிட்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் தவறாமல் தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சரியாக காலை 10 மணிக்கு முன்பே தலைமை செயலகம் வந்துவிடும் முதல்வர் விஜய் மாலை 4 மணிக்கு மேல்தான் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். மதிய உணவையும் கையோடு எடுத்து வரும் விஜய் அங்கேயே சாப்பிட்டுவிட்டு உடனடியாக தனது இருக்கைக்கு வந்து அலுவல் பணிகளையும் தொடங்குவதாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
தலைமை செயலகம் அருகிலேயே குடியேறுகிறாரா?
தலைமை செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு விஜய் தினமும் பயணிப்பதால் அவரது பாதுகாப்பிற்காக சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, சாலையிலும் முதல்வர் விஜய் செல்வதற்காக பிரத்யேக வழி உருவக்கப்பட்டு நெரிசலின்றி பயணிக்க ஏற்பாடு போலீஸ் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.
தினமும் 17 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும், போலீசாரும் கடும் சிரமத்தை சந்திப்பதாலும் தலைமை செயலகம் அருகிலேயே உள்ள பகுதிகளில் குடியேறலாமா என விஜய் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்து வந்த அரசு இல்லமான செவ்வந்தி காலி செய்யப்பட்டு இருப்பதால், அந்த வீட்டை தனது முகாம் அலுவலகமாக மாற்றலாமா? என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.















Click it and Unblock the Notifications