கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும்.. வண்டலூர் திணறுதே.. மேஜர் திட்டத்தை கையில் எடுக்கும் தமிழக அரசு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஏற்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிஎம்டிஏ முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். இப்போது வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
புகார்: இருப்பினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் மற்றும் அயனஞ்சேரி சந்திப்புகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் முக்கிய நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
குறிப்பாக நீண்ட விடுமுறை நாட்களில் ஒரே நேரத்தில் பலரும் சொந்த ஊருக்குத் திரும்ப முற்படும் போது கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. குடியரசு தின விடுமுறை சமயத்திலும் கூட நம்மால் இதைப் பார்க்க முடிந்தது. இதனால் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை அமைத்தும் பெரியளவில் பயனில்லை என்பது போல ஆகிவிட்டது. இது தொடர்பாக நெட்டிசன்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நடவடிக்கை: இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் இந்த பிரச்சினையைத் தீர்க்க கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் உள்ள மூன்று மாற்றுச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன என்று சிஎம்டிஏ தெரிவித்து இருந்தது. இதற்கிடையே இங்கு முழுமையாக டிராபிக் பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை சிஎம்டிஏ தயாரிக்க உள்ளது. அந்த விரிவான திட்ட அறிக்கைப்படி போக்குவரத்து பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
மேலும், வண்டலூருக்கு அடுத்து கிளாம்பாக்கம் அமைந்துள்ள நிலையில், அங்கு எளிதாகப் பொதுமக்கள் வந்து செல்ல முடியவில்லை என்ற புகாரும் இருக்கிறது. முன்பு புறநகர் பேருந்து நிலையமாகச் செயல்பட்ட கோயம்பேட்டிற்குப் பேருந்து, மெட்ரோ மூலம் வரலாம். ஆனால், கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை மெட்ரோவும் இல்லை.. மின்சார ரயில் நிலையமும் இல்லை. இப்போது தான் கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள்: இதனால் இப்போது பேருந்துகள் மூலம் மட்டுமே கிளாம்பாக்கத்திற்கு செல்ல முடிகிறது. போதிய பேருந்துகள் இருப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் சொல்லும் நிலையில், கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது 498 வழக்கமான பேருந்துகளை இயக்குகிறது.. மேலும், பீக் ஹவர்ஸில் 200 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 4,651 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் தாம்பரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் கிண்டிக்கு 3 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.
புது ரூட்: சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க நகர் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் புதிய ரூட்களில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர கிளாம்பாக்கம் நகரப் பேருந்து நிறுத்தம் முதல் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை 4 இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், வண்டலூர் ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை கட்டண பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், ப்ரீபெய்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளும் பேருந்து முனையத்திலேயே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனவரி 30 வரை மட்டும் டெர்மினஸில் இருந்து 642 ஆட்டோ புக்கிங், 510 டாக்ஸி புக்கிங் செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications