பொன்.மாணிக்கவேலின் மதவெறி.. போலீசாக என்னவெல்லாம் செய்திருப்பார் - மன்னிப்பு கேட்க சொல்லும் சிஎம்பிசி
சென்னை: பத்திரிகையாளரை மதரீதியாக இழிவுபடுத்திய காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும், பொன்.மாணிக்கவேல் தவறை வருந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் அவர்கள் நேற்று (29.10.23) வந்திருந்தார். அங்கு சாமி கும்பிட்ட அவர், சிலைகள் மற்றும் செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்த அறைகளையும் பார்வையிட்ட பிறகு கோவில் வளாகத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அறநிலையத்துறை குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் பொன் மாணிக்கவேல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த பத்திரிகையாளரின் பெயரை கேட்ட பொன் மாணிக்கவேல் அவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டார். உடனே அவரிடம் "நீங்கள் கோவிலைப் பற்றி விசாரிப்பதற்கே உங்களுக்கு யோக்கியதை இல்லை" என்று மதரீதியாக அந்த பத்திரிகையளாரை இழிவுபடுத்தும் வகையில் பொன் மாணிக்கவேல் மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். மேலும், அந்த பத்திரிகையாளர் கோவிலுக்குள் வந்ததே குற்றம் என்பதுபோல் மிகவும் அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவில்களுக்கு வழிபட வருவது போன்ற நிகழ்வுகளை செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதேபோல், கோவில் நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் செய்தியாளர்கள் அழைக்கப்படுவார்கள். அப்போது, குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த செய்தியாளர்கள் மட்டும்தான் கோவிலுக்குள் வர வேண்டும் என்றும் அவர்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் இதுவரை எந்த கோவில் நிர்வாகமும் கூறியதில்லை.
பொதுவாக, எந்த மதத்தை சேர்ந்த பத்திரிகையாளராக இருந்தாலும், செய்தி சேரிக்கும் நோக்கத்திற்காக எந்த ஒரு வழிபாட்டுத் தளத்திற்குள்ளும், அதன் கண்ணியத்திற்கும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செல்லலாம். செய்தி சேகரிக்கும் பணியிலும் ஈடுபடலாம். ஆகவே, செய்தியாளர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் கோவில் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பக் கூடாது என்பதும், அவர் கோவிலுக்குள் வந்ததே தவறு என்பதுபோலும் பொன் மாணிக்கவேல் கூறியிருப்பது மதரீதியாக பத்திரிகையாளரை இழிவுபடுத்தும் நோக்கத்தின் அடிப்படையிலேயே கூறப்பட்டது என்பது தெளிவாகிறது.
சாதி, மதம் என அனைத்து வகையான வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்களே பத்திரிகையாளர்கள். இந்த அடிப்படையே தெரியாத ஒருவர், காவல்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அந்தவகையில், பொன் மாணிக்கவேல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்திலும் அவருடைய செயல்பாடுகள் இந்த எண்ணத்தின் அடிப்டையில்தான் இருந்ததா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
ஆகவே, பத்திரிகையாளரின் மதத்தை குறிப்பிட்டு, அவர் கேள்வி எழுப்ப "யோக்கியதை" அற்றவர் என்று கூறிய பொன் மாணிக்கவேலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களை மதரீதியாக இழிபடுத்தியதுடன், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய பொன் மாணிக்கவேல் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கிறது.












Click it and Unblock the Notifications