நகை கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு..கூட்டுறவு வங்கிகளிலும் புதிய விதிமுறை!இனி மாதாமாதம் வட்டி கட்டணும்
சென்னை: நகை அடகு தொடர்பாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து தேசிய வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து வருகின்றனர். ஆனால், அங்கும் சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியது. தேசிய வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களில் நகை அடகு வைக்கும் போது புதிய விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்திருக்கின்றனர். குறிப்பாக வட்டியுடன் அசலையும் செலுத்தி நகையை திருப்பிய பிறகு அடுத்த நாள் தான் மறு அடகு வைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

தேசிய வங்கிகளைப் பொறுத்தவரையில் குறைந்த வட்டிக்கு நகை கடன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு வட்டி தொகை வசூலிக்கப்பட்டாலும், அதிகபட்சம் 10.25 சதவீதத்தை தாண்டி வட்டி வசூல் செய்யப்படுவதில்லை. மாதக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் மக்கள் தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெறுகிறார்கள்.
பழைய விதிகளின் படி ஒருவேளை முழு பணத்தையும் செலுத்தி நகைகளை திருப்ப முடியவில்லை என்றால் ஓராண்டு முடிவில் வட்டியை மட்டும் செலுத்தலாம். இதனால் நகைகள் மறு அடகு வைக்கப்பட்டதாக கணக்கிடப்படும் ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை காரணமாக வட்டியோடு அசலையும் சேர்த்து முழு தொகையும் செலுத்தினால் தான் நகையை திருப்பி மீண்டும் அடகு வைக்க முடியும். அதுவும் அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும் என்ற விதிமுறையால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனால் தேசிய வங்கிகளின் அடகு வைத்தவர்கள் நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளை அடகு வைத்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளை பொறுத்த வரை ஆண்டு வட்டி 12 சதவீதமாக இருந்தாலும் தற்போது அங்கு நகைகளை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது கூட்டுறவு வங்கியில் புதிய விதிமுறைகளின் படி இரண்டு லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெற்றவர்கள் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த வேண்டும். அதற்கு மேல் பெற்றால் மாத வட்டி செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அடகு வைத்தவர்கள் இதை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிதியாண்டு முடிவடைந்த நிலையில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு அடகு வைத்தவர்களை கூட வட்டி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால் பலரும் வேறு வழியின்றி வட்டி செலுத்தி இருக்கிறார்கள்.
தற்போது புதிய விதிமுறையின் படி நகைகளை அடகு வைத்து அதிகபட்ச 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். ஆனால் இரண்டு லட்சத்திற்குள் கடன் பெற்றால் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த வேண்டும். அதற்கு மேல் கடனுக்கு மாதவட்டி செலுத்த வேண்டும். ஆனால் பலரும் இதை தெரிந்து கொள்ளாமல் வட்டி செலுத்தவில்லை. இதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை குறித்து எடுத்துச் சொல்லி வட்டி செலுத்த சொல்லி இருப்பதாக கூறியிருக்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications