"கோவை, மதுரை மெட்ரோ.." வந்தது மேஜர் அறிவிப்பு! தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு! செம
சென்னை: தலைநகர் சென்னைக்கு அடுத்து மதுரை, கோவையில் மெட்ரோவை அமைக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இப்போது பெரும்பாலான இந்திய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் தான் முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் சாலைகள் மிகவும் நெரிசல் மிகுந்ததாக மாறி வருகிறது.
இதனால் முக்கிய நேரங்களில் வெளியே சென்றாலே குறிப்பிட்ட நேரம் சாலையில் தான் நிற்க வேண்டி இருக்கிறது. பீக் ஹவரில் என்ன நடக்கும் என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை.

முன்பெல்லாம் சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் மட்டும் டிராபிக் என்பது பிரச்சினையாக இருந்தது. ஆனால், இப்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் டிராபிக் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. விரிவான சாலைகளும் மேம்பாலங்களும் டிராபிக்கை தள்ளிப் போடுமே தவிர டிராபிக் பிரச்சினையைக் குறைக்காது. பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே டிராபிக் நெரிசலைக் குறைக்கும் என்பதையே சர்வதேச வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
அதன்படி பார்த்தால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து வலுவாகவே இருக்கிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள், மெட்ரோ உள்ளன. குறிப்பாக மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிகப்படியான மக்கள் மெட்ரோவை பயன்படுத்துகிறார்கள்.
டிராபிக் பிரச்சினை இல்லை, ஏசி பயணம் எனப் பல விஷயங்களை இதற்கு முக்கிய காரணமாகும். சென்னையில் இப்போது விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரை, சென்டிரல் முதல் பரங்கி மலை வரை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. மேலும், மாதவரம் பால் பண்ணை- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் 3 வழித்தடங்களில் மெட்ரோ விரிவாக்கமும் நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் படுவேகமாக நடக்கும் அதேநேரத்தில் சென்னைக்கு இணையாக இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோவை கொண்டு வரத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மதுரை, கோவை நகரங்களில் டிராபிக் இப்போது முக்கியமான தலைவலியாக மாறியுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் டிராபிக் தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், இங்கு மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்புடன் நிற்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் தமிழக அரசு தீவிரம் காட்டியது. இந்த இரண்டு நகரங்களிலும் மெட்ரோவை அமைக்கும் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கவனித்து வருகிறது. மதுரையில் பல இடங்களில் நில மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இதற்கிடையே மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை இப்போது தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக், அரசு கூடுதல் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பித்தார். அடுத்தகட்டமாக இதனை ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் மெட்ரோ பணிகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கும். மெட்ரோ என்பது இந்த இரு நகரங்களின் உட்கட்டமைப்பில் மிக பெரிய பூஸ்டாக இருக்கும். இது இரு நகரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியை பூஸ்ட் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
மதுரையில் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல கோவையிலும் அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலை வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications