கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் 'மிகப் பெரிய பயங்கரவாத செயல்'... எச்.ராஜா கடும் கண்டனம்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப் பெரிய பயங்கரவாத செயல் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக திமுக மீதும் எச்.ராஜா விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் வெடிபொருட்கள் கிடைத்தன.
இதனையடுத்து காரில் வெடிபொருட்களுடனான சிலிண்டர் எடுத்து சென்ற போது அது வெடித்தது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு
கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்ததையே இச்சம்பவங்கள் வெளிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து கோவை சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

என்.ஐ.ஏ.விசாரணை ஏன்?
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும், இருக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகள் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
இதனைத் தொடர்ந்து இன்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி. கோவையில் பதற்றம் நிலவியது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

எச்.ராஜா கருத்து
இதனிடையே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மிகப் பெரிய பயங்கரவாத செயல் நடந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. இது எனக்கு 1998 சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்ட சூழ்நிலையில் பயங்கர வாதிகளை கண்டிக்காமல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆக்டோபஸ் என்று விமரிசித்தார்.தி.மு.க மாறாத. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications