Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப சண்டைக்கு அறிக்கை! எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது! அட்டாக்கை ஆரம்பித்த ஆர்எஸ் பாரதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் காரில் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் திடீர் திருப்பமாக கணவன் மனைவி தம்பதி இடையே நடந்த தகராறு என தெரியவந்தது. முன்னதாக இது கடத்தல் சம்பவம் எனவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கோவை மாவட்டம் இருகூரை அடுத்த அத்தப்ப கவுண்டன்புதூர் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நேற்று (நவ.6) மாலை ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த காரில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன.

Coimbatore Kidnapping RS Bharathi

இது தொடர்பாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒருவர் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். விசாரணையில், காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி என்பதும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறை, கடத்தல் என அறிந்து வெளி நபர்கள் தகவல் பரப்பியதும் தெரியவந்தது.

கோவை கடத்தல் வழக்கு

முன்னதாக இது தொடர்பாக அறிக்கை விட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி," கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது." என கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்! ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல் துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. ''என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

பொய் கடத்தல் செய்தி

இதே போல நேற்றைய முன் தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

திமுக அரசு பதில்

திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+