கேஸ் சிலிண்டரால் ஃப்யூஸ் போன ஹோட்டல்கள்! அதிரடியாக உயர்ந்த உணவு விலை! கடையை மூட தயாராகும் ஓனர்கள்!
சென்னை: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் நேரடியாக உணவகங்கள் மற்றும் தெருவோர உணவுக் கடைகளில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் மூலமாக மக்களின் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல்வேறு செலவுகள் அதிகரித்து சிரமப்பட்டு வந்த சிறு வியாபாரிகள், இந்த புதிய விலையேற்றத்தால் மேலும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலர் தொழிலை விட்டே செல்லும் முடிவுக்கு வந்திருப்பதாக புலம்பும் நிலையில், பலர் வேலையிழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, 19 கிலோ எடையுள்ள வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே நேரத்தில் ரூ.993 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு உணவகத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறுகையில், "ஏற்கெனவே உணவுப் பொருட்களின் மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது. அதோடு ஊழியர் சம்பளம், மின்சாரம், போக்குவரத்து செலவு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் எரிவாயு விலை இவ்வளவு உயர்ந்திருப்பது மிகப் பெரிய சுமையாக உள்ளது" என்று தெரிவித்தனர்.
எரிவாயு விலை உயர்வு
குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய உணவகங்கள் தினமும் 2 முதல் 5 எரிவாயு உருளைகள் வரை பயன்படுத்துகின்றன. தற்போது ஒரு உருளையின் விலை ரூ.3000 முதல் ரூ.4000 வரை உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் தினசரி செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவகங்கள் தெரிவிக்கின்றன.
உணவு விலை
தேநீர், காபி, இட்லி, தோசை போன்ற பொதுவான உணவுப் பொருட்களின் விலையே விரைவில் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தினசரி வாழ்க்கைச் செலவும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், எரிவாயு உருளைகள் கிடைப்பதில் கூட சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். சில இடங்களில் கருப்பு சந்தை மூலம் அதிக விலையில் உருளைகள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிறு உணவகங்கள் நடத்துவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சில உணவக சங்கங்கள் மாற்று வழியாக குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு மாற வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளன. ஆனால் அதற்கும் முதலீடு தேவைப்படுவதால், எல்லா சிறு வியாபாரிகளாலும் உடனடியாக மாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், பல சிறிய உணவகங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரிக்கக்கூடும் என்றும் உணவக உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சமையல் எரிவாயு
ஏற்கெனவே சில இடங்களில் கடைகள் மூடப்பட்ட அனுபவம் இருப்பதால், இந்த விலையேற்றம் மீண்டும் அதே நிலையை உருவாக்குமோ என்ற அச்சமும் நிலவுகிறது. அதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்
இருப்பினும், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை காரணமாக வெளியில் உணவக செலவு அதிகரிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. எரிவாயு விலை உயர்வு என்பது உணவகங்களை மட்டும் அல்லாமல், பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நிலை எப்போது சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகளும், மக்களும் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications