இதெல்லாம் செய்யலாமே..லட்டு மாதிரி கொட்டுமே தமிழக வாக்குகள்.. மோடி, அமித் ஷாவுக்கு ஒரு கடிதம்!
Recommended Video
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு பாமர தமிழனின் கடிதம். எந்த கட்சியாலும் வெல்ல முடியாத உயரத்தில் உங்கள் கட்சி இருக்கிறது. தமிழகத்தை பற்றி உங்கள் பார்வை எப்படி என்பது எங்களுக்கு பெரிதாக தெரியாது.
ஆனால் உங்களின் பிரதிநிதிகளின் பார்வை தான் உங்கள் பார்வை என்று முடிவு செய்யும் நிலையில் உள்ளோம். தமிழர்கள் யாரும் உங்கள் சித்தாந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த கடிதம்.
தமிழர்கள் என்றாலே இந்துத்துவா சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போன்ற தோற்றம் உங்கள் முன் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். இதேபோல் தீவிர வலதுசாரி சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் தமிழர்கள் பலர் எதிரானவர்கள் என்பது போலும் இங்கே காட்டும் முயற்சிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. ஆனால் இவை எதுவுமே உண்மை இல்லை என்பதே எதார்த்தம். தமிழர்கள் எல்லோருமே இந்துத்துவா எதிர்ப்பு மற்றும் கடவுள் வழிபாடு மீது வெறுப்பு உடையவர்கள் கிடையாது.

கடவுள் வெறுப்பு
இதற்கு சிறந்த உதாரணம் ஒன்று சொல்கிறேன். உங்கள் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள் என்று கருதப்படும் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கூட கோயிலுக்கு செல்வார். கடவுளை வணங்குவார். எனவே கடவுள் வெறுப்பு உணர்வு என்பது கடவுளை வணக்காதவர்களின் குடும்பத்தினரிடம் கூட தமிழகத்தில் இல்லை.

எப்படி கடவுள் வெறுப்பு
ஏன் நான் கேள்விப்பட்டவரையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான மிக அற்புதமான கோயில்கள், இந்து பண்டிகைகள், கலாச்சாரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இங்கே தெருவுக்கு 4 பிள்ளையாரும் , ஊருக்கு நான்கு சிவனும், 2 அம்மன்களும், 3 பெருமாளும் நிச்சயம் இருப்பார்கள். இப்படி இருக்கையில் கடவுள் வெறுப்பு என்பது எப்படி இங்கு சாத்தியம்.

மற்ற தொழிற்சாலைகளுக்கு
இதேபோல் இங்கு நடக்கும் போராட்டங்களை சுட்டிக்காட்டி தொழில்வளர்ச்சிக்கு எதிரான சிந்தைனை உடையவர்கள் என்பது போலும் காட்டப்படுகிறது. அதிலும் துளியும் உண்மை இல்லை. ஏனெனில் தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன. எத்தனை லட்சம் மக்கள் வேலை செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். எல்லா தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராடவில்லையே. எல்லா சாலைக்கும் எதிராக போராடியது இல்லை என்பதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பயங்கரவாதிகள் அல்ல
ஏனெனில் சிலர் இந்து மதத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் மற்ற மதத்தினர் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். இதேபோல தவறுகளை களைய போராடும் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற மனநிலையில் செயல்படுகிறாரகள். இதை தடுத்து நிறுத்துங்கள். இதை செய்துவிட்டு தமிழக மக்களுக்காக உங்கள் கட்சியினர் சிந்தித்தாலே போதும். தமிழர்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்கள். அவர்களுக்காக சற்றே இறங்கி வந்தால் பாஜகவை நிச்சயம் தமிழக மக்கள் வரவேற்பாரகள். அப்படி நடந்தால் இன்னும் சில வருடங்களில் மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் பாஜக பெறும்.












Click it and Unblock the Notifications